Friday, June 8, 2012

காதல்

சுழியில் சிக்கிய


நான்....


நீரின்

மேடு பள்ளங்களில்

மோதி திரும்பும் பொழுதுகளிலும்

நினைவுகளில்

நீதான்...


நீ

என்ன செய்வாய்

என்ற எண்ணம்தான்...


என்னை தழுவிக்கொள்வாயா

காது மடல் வருடுவாயா

கூந்தல் கலைத்து

கன்னம் கடிப்பாயா

மூச்சு முட்டும்போது

முத்தமிட்டு மீட்பாயா


ஆனாலும் நீ...

ஏதாவது செய்தேயாகவேண்டும்


என்னைக் காப்பாற்ற


உயிர்குடிக்கும்

சுழலில் இறங்குவாயா?

உனக்கு நீச்சல் தெரியாதாயிற்றே...


என்னைக் காப்பாற்ற

உனது ஆடை களைந்து

கயிறாக்கி தருவாயா?

உனக்கு மானம் பெரியதாயிற்றே...


என்னைக் காப்பாற்ற

உச்சக் குரலில்

ஊர் கூட்டி அழைப்பாயா?

உனக்கு காட்டிகொடுக்கத் தெரியாதாயிற்றே...


என்ன செய்யப் போகிறாய்...

..............


தோள்தொட்டு உலுக்கி

எனை

எழுப்பினாய்...!

Thursday, June 7, 2012

ரசிகபெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்... (2)


ஹ்ம்ம்... :)


நண்பர் பிச்சைக்காரனுக்கு முதலில் என் நன்றி.

ஏனென்றால், பின்னூட்டம் எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தபோது தெரியவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்டபிறகு படித்துப் பார்த்த போது கொஞ்சம் over react செய்து விட்டோமோ என்று வருத்தப்பட்டேன். நல்ல வேளையாக நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாகவே பிடித்துக்கொண்டீர்கள். மறுபடி நன்றி.

ஒரு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - உங்களுக்கும் என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த ராஜாவிற்கும் -

உங்கள் விமரிசனத்தில் வழக்கு எண் படத்தை நீங்கள் பிடித்து இருந்ததாக எழுதவில்லை. நான்தான் குழப்பிகொண்டேன். காரணம், உங்கள் வலைப்பூவையும் நண்பர் லுக்கிலுகின் வலைப்பூவையும் எப்பொழுதுமே குழப்பிக்கொள்வேன். அதுவே இப்பொழுதும் நடந்துவிட்டது...

"அடிச்சான் பார்யா பல்டி" என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. :)

இனி... என் சில கேள்விகள்...

பாரதியின் சைவ வைணவ சண்டையை பார்த்து நொந்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற வசவும், சாருவின் 'பாத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத தமிழர்கூட்டம்' என்ற வசவும் ஒன்றுதான் என்று சொல்ல வருகிறீர்களா...?

பத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத கூட்டம் எப்படி பெரிய கூட்டமாகும்? சிறிய கூட்டம்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்...? சாருவே ஒப்புக்கொள்கிறார். முதலில் இதை ஒப்புக்கொண்டால்தான் இந்த சிறிய கூட்டத்தை பெரியதாக ஆக்க முயல முடியும். இந்த கூட்டத்திற்கே "அவர்கள்" பதட்டப்படுகிறார்களே என்று பேசித்திரிவது எந்தவிதத்திலும் பெருமை கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து. (முதலில் நமது கூட்டம் அவர்கள் கூட்டம் என்பதே உடன்பாடில்லாத விஷயம். சில மாதங்கள் முன்புவரை இரண்டும் ஒரு கூட்டமாகத்தான் இருந்தது...)

// சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் ? நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். // - மன்னிக்கவும். அப்படி எல்லாம் யாராலும் - திரும்பவும் சொல்லுகிறேன் - யாராலும் இருக்க முடியாது.

என்னுடைய சவால் என்று நான் சொன்னது நண்பர் ராஜாவை காயப்படுத்தியிருப்பது போல் படுகிறது. அது விளையாட்டாக சொல்லப்பட்டது அல்ல நண்பரே. என்றோ ஒருமுறை சாருவின் வலைபூவிலேயே அவர் நாவல்களைப்பற்றி வாசகர் வட்டத்தில் நடந்த விவாதமாக நடந்ததை வெளியிட்டு இருந்தார். அதில் சாருவின் தீவீர வாசகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களே தாங்கள் படித்த சாருவின் கதைகளை ஒரு குழப்பத்துடனே விவாதித்தார்கள். இப்பொழுதும் சொல்லுகிறேன் - அவரின் எல்லா எழுத்துக்களையும் பத்து பிரதிகள் வாங்கிக்கொள்கிறேன். என்னால் நண்பர் ராஜா அழைத்த கூட்டத்திற்கு வரமுடியாமல் போகலாம். ஆனால் அது பிரச்சனையே அல்ல. நீங்களே திருப்திகரமாக சொல்லுங்கள் ராஜா. நான் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன்.

//நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது// - எங்கே சென்றுவிட்டது? முதலில் உலக இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியம் இல்லாமல் உலக இலக்கியம் முழுமையடைந்துவிடுமா? இந்த உலக - என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கொஞ்சம் பதற்றம் உண்டாகிறது. என் தவறாகவே இருந்து தொலையட்டும். நீங்களாவது பதில் சொல்ல முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை, எழுதிக்கொண்டு இருப்பதை நாமும் எழுதுவதுதான் தமிழிலக்கியத்தின் முன்னேற்றமா? அவர்கள் இசையை அவர்களுக்கே வாசித்து காட்டி கைதட்டல் வாங்கும் எ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளரா இல்லை நமது தவிலையும் நாதஸ்வரத்தையும் அங்கே எடுத்து செல்லும் தைரியம்கொண்ட இளையராஜா சிறந்த இசையமைப்பாளரா...

நான் சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா என்று தெரியவில்லை... உங்கள் பதிலில் தெரியும் என்றும் என்று நம்புகிறேன். :)

Tuesday, June 5, 2012

ரசிக பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...

http://www.pichaikaaran.com/2012/06/blog-post.html#comment-form

நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன். எனக்கே இதில் என்ன புதிய பார்வை இருக்கிறது என்று குழப்பம் வருகிறது... ஏற்கனவே நிறைய பேர் இதை நிறைய விதங்களில் எழுதி இருக்கிறார்கள். ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இந்த கோணத்திற்காக சாருவை கொண்டாட என்ன இருக்கிறது என்று புரியவில்லை.


மேலும், இங்கே நீங்கள் சிலாகித்து பேசி இருக்கும் அவரின் மற்ற கட்டுரைகளிலும் எதிலுமே ஒரு புதிய பார்வை, புதிய கோணம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாமே ஏற்கனவே பலமுறை பல பேரால் சொல்லப்பட்டதுதான். எழுதப்பட்டதுதான். இதில் சாரு எங்கே வித்தியாசபடுகிறார்? எழுத்துநடை என்று மறுபடி மறுபடி சொல்லவதில் எனக்கு சில தயக்கங்கள் இருக்கிறது.

content இல்லாத ஒரு எழுத்துநடை வெறும் வியாபார தந்திரம் மட்டுமே... புதிய மொந்தையில் பழைய கள் அவ்வளவே... இதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

பாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்...! தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.

நீங்கள் சாருவின் பரம ரசிகனாக இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கமுடியாது. அது உங்கள் உரிமை. என் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்?

சமீபத்திய உதாரணம் காட்டவா...

வழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது?

நான் ஒரு சவால் விடவா?

சாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால், அந்த கதை இதுவரை யாருமே எழுதாத படைப்பாக, தொடாத சிந்தனையாக இருந்துவிட்டால், அவருடைய அத்தனை புத்தகங்களையும் பத்து பத்து பிரதிகள் நான் வாங்கிக் கொள்கிறேன்.

அப்படி நடக்காமல் போனால், ஊரில் இருப்பவர்களை எல்லாம் வைது கொண்டு இருக்காமல் நீங்களும் இருக்கவேண்டும். சாருவையும் அப்படி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

நன்றி.