Wednesday, July 28, 2010

அம்மா...

அம்மா-
என் செல்ல அம்மா

தினம் எனக்கு முத்தம் தந்து
முத்தம் பெறத்துடிக்கும் அம்மா
தினம் எனக்குத் தாலாட்டு பாடி
தூங்கச் செய்யும் அம்மா

விரல் தொட்டு தளிர்நடை நடந்துனை
உள்ளம் விம்மிட வைப்பேன்
உன் கன்னம்தொட்டு எச்சில் முத்தமிட்டு
நெஞ்சம் நனைய வைப்பேன்

கொஞ்சும் மழலை பேசி உன்னை
கொஞ்சம் மயங்க வைப்பேன்.
தஞ்சம் தஞ்சம் என்று உன்னை
எனக்குள் தடுமாற வைப்பேன்

அப்பா அவர் மூலம் இந்த
உலகத்தை நான் அறிவேன்
அம்மா உன் மூலம் இந்த
உலகத்தை நான் அடைவேன்

மனதில் என்றும் உங்களை நிறுத்தி
முதியோர் இல்லம் மறக்கச் செய்வேன்
மகனிவன் என் மகன் என்று
மனம் நெகிழச்...

பாடிக் கொண்டிருந்த குழந்தையின் பாடல்
பாதியில் முடிந்து போனது -
வெற்றிகரமாக முடிந்த
கருச்சிதைவால்....

பத்தோடு பதினொண்ணு...

தொலைக்காட்சியில் -
திரைப்படம்,
திரைப்பாடல்,
தொடர்,
செய்தி,
விளம்பரம்,
விவாதம்,
பட்டிமன்றம்,
பாட்டுக்கு பாட்டு,
மற்றும் -
குடியரசுதின நிகழ்ச்சி...

கண்டதும் கொண்டதும்

காதல் கண்டேன் -
கவிதை வந்தது!
கலவி கண்டேன் -
காமம் வந்தது!

காசுபணம் கண்டேன்-
கர்வம் வந்தது!
காலம் கண்டேன்-
கவலை வந்தது!

கல்வி கண்டேன்-
அறிவு வந்தது!
அறிவு கண்டேன்-
கேள்விகள் வந்தது!

கேள்விகள் கண்டேன்-
கருத்து வந்தது!
கருத்து கண்டேன்-
குழப்பம் வந்தது!

குழப்பம் கண்டேன்-
தெளிவு வந்தது!
கண்டதெல்லாம் துறந்தேன்-
ஞானம் வந்தது...!